கடற்றொழிலாளர்களுக்கு நற்செய்தி : தடையின்றி எரிபொருள் கிடைக்க புதிய நடைமுறை!
நாட்டின் கடற்றொழிலை எவ்வித தடையுமின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக புதிய எரிபொருளை முகாமைத்துவத் திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் தீர்மானங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.காலித கமல் ஜினதாச தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் படகுகளுக்கான எரிபொருள் அந்தந்த துறைமுகங்கள் ஊடாக விநியோகிக்கப்படும். படகு கண்காணிப்பு அமைப்பு மூலம் படகின் பயணத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு, அவசியமான எரிபொருள் அளவு முறையாக முகாமைத்துவம் செய்யப்படும்.
சுமார் 30,000 சிறிய படகுகளுக்கு எரிபொருள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட சுமார் 100 எரிபொருள் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கப்படும்.
இதற்காக கடற்றொழில் அதிகாரிகளின் பரிந்துரை அவசியமாகும். ஒரு படகிற்கு ஒரு நாளைக்கு 25 லீற்றர் வீதம், 5 நாட்களுக்கு ஒருமுறை எரிபொருள் விநியோகிக்கப்படும். நெடுந்தீவு மற்றும் பத்தலங்குண்டுவ போன்ற தொலைதூரப் பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்களின் தேவைகளுக்கு விசேட முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகளில் உள்ள மின்பிறப்பாக்கிகளுக்குத் தேவையான எரிபொருளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும் என செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்