காவல்துறை பெயரில் போலி செய்திகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு.
"இலங்கை காவல்துறை தலைமையகத்தின் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சில பதிவுகள் போலியானவை என காவல்துறை தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு வழிகாட்டல் வழங்குவதாகக் கூறி பகிரப்படும் இத்தகைய பதிவுகளால் மக்கள் ஏமாற்றமடைய வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காவல்துறை தலைமையகத்தின் அனைத்து உத்தியோகபூர்வ விழிப்புணர்வு செய்திகளும் காவல்துறை ஊடகப் பிரிவினால் மாத்திரமே வெளியிடப்படும்.
உத்தியோகபூர்வ செய்திகள் அனைத்தும் காவல்துறை தலைமையகத்தின் முறையான கடிதத் தலைப்பிலேயே ஊடக அறிக்கைகளாக வெளியிடப்படும்.
காவல்துறை ஊடகப் பிரிவினால் நிர்வகிக்கப்படும் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளக் கணக்குகள் மற்றும் சேனல்கள் மூலம் மட்டுமே தினசரி தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும்.
காவல்துறையினரால் வெளியிடப்பட்டது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கி, போலித் தகவல்களைப் பரப்புபவர்கள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களைப் பகிரும் முன்போ அல்லது பின்பற்றும் முன்போ அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
துல்லியமான தகவல்களுக்கு உத்தியோகபூர்வ காவல்துறை ஊடக வழிகளை மட்டுமே நம்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்