'கெஹெல்பத்தர பத்மே'விடம் 90 நாட்கள் விசாரணை செய்ய அனுமதி!!
கொழும்பு நீதிவான் நீதிமன்றக் கூண்டுக்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களுக்கு ஆதரவளித்ததாகக் கருதப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' என்பவரை மேலும் 90 நாள்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதி வழங்கினார்.
உலகக் குழு உறுப்பினர் எனக் கருதப்படும் கெஹெல்பத்தர பத்மே, ஏற்கனவே 90 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மேலும் 90 நாள்களுக்கு அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்று நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் நிரோஷன் உதித் உதயசாந்தவுக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த மேலதிக விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் தடுத்து வைப்பதற்கான அனுமதியை வழங்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.
இதனைக் கருத்திற்கொண்ட நீதிமன்றம், சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதியளித்தது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்