இந்திய போர் வானூர்தி மாயம்!
இந்திய வான்படைக்குச் சொந்தமான சுகோய்-30 (Sukhoi-30) ரக போர் வானூர்தி ஒன்று நேற்று (மார்ச் 5, 2026) மாலை மாயமான நிலையில், அது அசாமுக்கும் நாகாலாந்திற்கும் இடையிலான எல்லையோரக் காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் ஜோர்ஹட் வான்படைத் தளத்திலிருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பும் போது, மாலை 7:42 மணியளவில் ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட இந்த வானூர்தி , ஜோர்ஹட்டில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள கர்பி ஆங்லாங் (Karbi Anglong) மலைப்பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது. வானூர்தி விழுந்த போது ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில், வானூர்தியில் இருந்த இரண்டு வானூர்தி ஓட்டுநர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
மலைப்பாங்கான மற்றும் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் தேடுதல் பணிகளில் பாரிய சிக்கல்கள் நிலவுகின்றன.
இருப்பினும், இந்திய வான்படையின் விசேட மீட்புக்குழுவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து உலங்கூர்திகள் உதவியுடன் வானூர்தி ஓட்டுநர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே )