கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

#SriLanka #Protest #Kilinochchi #people #Missing
Prasu
3 months ago
கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தமது உறவுகளை தேடி ஆரம்பித்த போராட்டம் 09வது ஆண்டு இன்று நிறைவடைகின்ற நிலையில் தமது உறவுகளுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயம் முன்பாக காலை 10.30மணிக்கு ஆம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக சென்று டிப்போ சந்தி மீனாட்சி அம்மன் ஆலயம் முன்பாக நிறைவடைந்தது. 

2017ம் ஆண்டு 02ம் மாதம் 20ம் திகதி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது உறவுகளைத்தேடி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

தொடர்ந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் 3287 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

images/content-image/1771605687.jpg

“வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களாகிய நாங்கள் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை கடந்தும் தொடர்ச்சியாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவில் முன்றலில் 20.02.2017 அன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 3287 நாட்களைக் கடந்தும் எந்த வித பதிலும் நீதியும் கிடைக்கப் பெறவில்லை.

நாம் தள்ளாடும் முதிர்ந்த வயதிலும் நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம், பிள்ளைகளைத் தேடி அலையும் தாய்மார்களாகிய எங்களின் கண்ணீருக்கு என்ன பதில்? மீண்டும் சர்வதேச நாடுகளுக்கு நாம் வலியுறுத்துவது யுத்தத்திற்கு முன்பும் பின்பும் எமது தமிழ் இனத்துக்கு நடைபெற்ற இன ஒடுக்குமுறைகளின் மிக உச்சக்கட்டமாக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனவழிப்புக்கு இது வரை நீதி கிடைக்கவில்லை, நாம் எம் கண் முன்னே பார்த்து சொல்லனாத் துயரத்தை அனுபவித்தோம்.

images/content-image/1771605708.jpg

அது மட்டுமின்றி இன்றும் இன ஒடுக்குமுறைக்கு நீதி கிடைக்கவில்லை. அண்மையில் நிகழ்ந்த இயற்கை சீற்றம் காரணமாக டித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவிற்கு சர்வதேச நாடுகள் காட்டிய அக்கறைப் போல ஏன் ஒரே நாட்டில் போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள்,சிறுகுழந்தைகள்,கர்ப்பிணித் தாய்மார்கள்,இளைஞர் யுவதிகள் ,வயது முதிர்ந்தவர்கள், கொன்று குவிக்கப்பட்டபோது அமைதி காத்தார்கள் அப்போது நடைபெற்றது மனித உரிமை மீறல் இல்லையா? 

உங்களின் மனித உரிமைகள் செயற்பாடு அன்று ஏன் அமைதி காத்தது ?யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு சரணடைந்தவர்கள் பல ஆயிரக்கணக்கானோர் சிறுகுழந்தைகளுடனும் குடும்பம் குடும்பமாகவும் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டார்கள்.

பல ஆயிரக்கணக்கானோர் வடக்கு கிழக்கில் இராணுவ கட்டுப்பாடு பகுதியில் வைத்து கடத்தி செல்லப்பட்டார்கள்.வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டவர்களும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது. 

அவர்களை என்ன செய்தார்கள் என்பதனை யுத்தம் முடிவடைந்த பின்பு ஆட்சிக்கு வந்த 5 அரசுகளிலும் எந்த அரசும் இதற்கான பொறுப்புக்கூறவில்லை என்பதை நாம் தெட்டதெளிவாக கூற முடியும் ஏன் என்றால் அவர்கள் குற்றத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், தமது இராணுவத்தை காட்டி கொடுக்க மாட்டார்கள். 

இரண்டும் நடை பெறாத இடத்தில் எப்படி பொறுப்பு கூறல் நடைபெறும். சர்வதேச சமூகத்திடம் நாம் கேட்டுக் கொள்வது கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழிகளில் இருந்து எடுக்கப்பட்ட மனித எச்ச எலும்புகூடுகளுக்கு முறையான சர்வதேச நிபுணர்த்துவர்களின் பங்களிப்புடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

images/content-image/1771605725.jpg

குறிப்பாக புதைகுழிகள் பல மூடப்பட்டுள்ளன. தற்போது செம்மணி புதைகுழிக்கான அகழ்வுப்பணிகள் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுகொண்டு இருக்கின்றது. 

எனவே அதற்கான சர்வதேச தலையீடு அவசியம் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம். படுகொலையை செய்யும் இராணுவத்திற்கு பதவி உயர்வு வழங்கும் நாட்டில் எமக்கான நீதி வழங்கப்பட மாட்டாது . 

எனவே தான் நாம் சர்வதேச நீதி கேட்டு 3287 நாட்களைக் கடந்து போராடி வருகின்றோம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சாட்சிகளாக இருந்த 400 மேற்பட்ட தாய் தந்தையரை இழந்து நிற்கின்றோம். 

அவர்களின் பிள்ளையின் உண்மை நிலை அறியாமல் ஏக்கத்துடன் மரணித்து விட்டார்கள். 

மிகுதியாக எஞ்சியிருக்கும் சாட்சியங்களாக இருக்கின்ற நாங்களும் இறப்பதற்கு முன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கண்டறிய சர்வதேச சிறப்பு சுயாதின விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றோம். எனவே பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைக்கின்றோம் 

1.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும். 

2.அரசியல் கைதிகள் நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும்.

3. நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை[P.T.A]அத்தோடு புதிதாக அமுல்படுத்த இருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம்[PSTA] இரண்டு சட்டங்களும் உடனடியாக நீக்கப்படவேண்டும். 

images/content-image/1771605749.jpg

4. இராணுவ முகாம்கள் வட கிழக்கில் மூடப்பட வேண்டும். 

5.வட கிழக்கில் மனித புதைகுழிக்கான அகழ்வு பணியை கண்காணிக்க சர்வதேச நிபுணர்களின் தலையீடுவேண்டும். 

6. பத்திரிகையாளர்கள், மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் புலனாய்வுத் துறையின் அச்சுறுத்தல் உடனடியா நிறுத்தப்பட வேண்டும். 

7. பொளத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். 

8. எமது தாயகத்தின் வளச் சுரண்டல் நிறுத்தப்படவேண்டும். 

9. அனத்து வகையாக தாயகத்தில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4