வவுனியா கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி!
வவுனியா - சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிடாது தடுத்து வந்த தொல்பொருள் திணைக்களம், சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் பிரதேசம் என பெயர் பலகை இட்டிருந்ததோடு, அங்கு உள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கி இருந்தது.
அங்கிருந்த பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளையும் இடைநிறுத்தி இருந்ததோடு, எவ்வித புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள விடாது தடை செய்திருந்தது. எனினும் ஊர்வலங்கள் கடும் பிரயத்தனத்தின் மூலம் கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சின் அனுமதியை பெற்று இடம்பெற்றது.
இந் நிலையை சாதகமாக பயன்படுத்திய தொல்பொருள் திணைக்களம் அங்கிருந்த எண்கோண மண்டபத்தின் தாம் புனரமைத்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்பதனை அறிந்து எங்கோண மண்டபத்தில் விகாரை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை குறித்த எண்கோண மண்டபம் இருந்த பகுதியில் கடந்த காலத்தில் எண்கோண வடிவிலான சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டு, அது தற்போது எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் கோவில் கொண்டு எழுந்தருளி இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த மண்டபம் அமைந்திருந்த பகுதியிலேயே தற்போது விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
குறித்த எண்கோண வடிவிலான சிவலிங்கம், கிளிநொச்சி, குறுந்தூர்மலை மற்றும் இந்தியாவின் கும்பகோணம் பகுதிகளிலும் ஆய்வுகளின் போது காணப்பட்டதாக தொல்பொருளாளர்கள் தெரிவிப்பதோடு, குறித்த சிவலிங்கம் எண்கோண மண்டபத்தில் வைத்து புராதன காலங்களில் வழிபட்டு இருக்கலாம் என்கின்ற வரலாறுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையிலையே குறித்த இடத்தில் விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.