சர்வதேச தலைவர்களுடன் கோலாகலமாக நடந்து முடிந்த சீனாவின் ராணுவ அணிவகுப்பு

இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில், சீனாவின் நட்பு நாடுகள் உள்பட சுமார் 26 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நீண்ட காலத்திற்கு பிறகு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகியோர் தியான்மென் சதுக்கத்திற்கு வருகை தந்து சீன ராணுவத்தின் அணிவகுப்பை பார்வையிட்டனர்.
அவர்கள் ஒற்றுமையாக பொதுவெளியில் தோன்றியதன் மூலம், அமெரிக்காவுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதே போல் ஈரான் அதிபர் மசூத் பெசேஸ்கியன், பெலாரஷியாவின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாசென்கோ, கம்போடியா மன்னர் நரோதம் சிகாமணி, வியட்நாம் அதிபர் லுவாங் குவாங், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், மியான்மர் ராணுவ தலைவர் ஆங் ஹிலாங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், கசகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட், கியூபா அதிபர் மிகுவெல் டயாஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை செர்பியா அதிபர் மற்றும் ஸ்லொவாக்கியா பிரதமரை தவிர மற்ற தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியாவின் தலைவர்களும் சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



