நீலன் பீரிஸ் அஷ்ரப் தீர்வுத் திட்டம் - தோற்றமும் மறைவும்

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களினால் கொண்டுவரப்பட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த ஆலோசனைகளில் அடங்கிய தீர்வுத்திட்டத்தை, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது.
பிராந்தியங்களின் தீர்மானங்களை அப் பிராந்தியங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்பதான ஓர் ஆலோசனை தான் ஐக்கிய தேசியக் கட்சி வைத்த யோசனையின் அடிப்படை.
மீளப்பெற முடியாத அதிகாரங்கள் கொண்ட பிராந்தியங்களின் அதிகாரங்களை ஒற்றையாட்சி முறையின் அதிகார மையமான பாராளுமன்றத்திற்கு மீண்டும் வழங்குவது போன்றதாகும்.
சந்திரிகாவின் அரசு தரப்பால் அந்த யோசனை ஏற்கப்படவில்லை. அதனாலேயே ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்த்தது. ஐக்கிய தேசியக் கட்சியைப் போலவே மக்கள் விடுதலை முன்னணியும் அத்தீர்வுத் திட்டத்தை எதிர்த்தது.
இதற்கு முன் வந்த அரசியலமைப்பு வரலாற்றில்,1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்கப்படமுன்னர் அதற்கு ஆலோசனை சமர்ப்பித்த தமிழரசுக் கட்சி ஐந்து பிராந்தியங்கள் கொண்ட சமஷ்டி முறை அரசியல் அமைப்பு யோசனையைச் சமர்ப்பித்தது. அன்றைய ஐக்கிய முன்னணி அரசு ( ஶ்ரீ மாவோ கூட்டணி அரசு) ஏற்கவில்லை.
1978 இல் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு யாப்பு உருவாக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் தரப்பின் ஆலோசனையையே கோரவில்லை.
1977 பொதுத்தேர்தலில் தனது பிரசாரத்தின்போது , பதவிக்கு வந்ததும் வட்டமேசை மாநாடு மூலம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்று தெற்கிலும் வடக்குக் கிழக்கிலும் ஐக்கிய தேசியக் கட்சி பரப்புரையை மேற்கொண்டபோதும் அது பதவிக்கு வந்ததும் தமிழர் பிரதிநிதிகளுடன் பேசாமலே தனது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்தது.
சந்திரிகா அரசு 1994 இல் பதவியேற்ற பின்னர் கொண்டு வந்த புதிய அரசியல் அமைப்பு யோசனைகளை மூன்று இனங்களையும் சேர்ந்த தலைவர்களைக் கொண்டு எழுதியது. அதில் முக்கிய வகிபாகம் அரசியல் யாப்புச் சட்டமேதை கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களுடையது.
இவரது தந்தையார் அமரர் மு. திருச்செல்வம் சோல்பரி அரசியல் யாப்பு எழுதிய சேர் அலனுக்கு உதவியாளராயிருந்தவர். இலங்கையின் மூவின மக்களின் பிரதிநிதிகளான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், சட்ட விரிவுரையாளர் கலாநிதி நீலன் திருச்செல்வம், வழக்கறிஞரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் எச்.எம். அஷ்ரஃப் ஆகிய மூவரால் தயாரிக்கப்பட்டது.
'அமிர் அண்ணனுக்குத் தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தராமற்போனால் நான் அதற்காகப் போராடிப் பெற்றுத் தர முயல்வேன்' என்று 77 தேர்தல் மேடைகளில் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள்.
1983 இனவன்செயல் முடிந்த பின்னர் இலங்கை அரசாங்கம் தொடர்பான தீர்க்கமான தீர்மானத்தை இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி எடுப்பதற்காக இலங்கை இனப்பிரச்சினை , இன அழிப்பு நடவடிக்கைகளை இந்திய உபகண்ட மக்களுக்கு விளக்கும் வகையிலும் தாம் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளின்போது எதிர்க் கட்சிகள், நீதி சட்டத்துறை சார்ந்த நிபுணர்கள் ஆதரவளிக்கவோ அல்லது அடங்கியிருக்கவோ செய்யும் வகையிலுமாக ஒரு பத்திரிகையாளர், கல்விமான்கள் மாநாட்டை ஏற்பாடுசெய்து, அதில் ஈழத் தமிழர் பிரச்சினையை விரிவாக விளக்கமாக விளக்கும்படி தலைவர்கள் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் ஆகியோரிடம் கேட்டபோது, அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவர் தான் கலாநிதி நீலன் திருச்செல்வம்.
அன்று அந்தப் பிரமாண்டமான செய்தியாளர்கள் கல்விமான்கள் மாநாடு வந்த படங்களைப் பார்த்தவர்கள் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள். பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களின் சட்ட நூல்கள் சட்டத்துறை மாணவர்களுக்கு பைபிள் போன்றவை.
அவரது நூல்கள் படிக்காதவர்கள் இலங்கையின் நீதித்துறை சட்டத்துறையில் இருக்கமுடியாது.
இத்தகைய சிறப்புகள் பெற்ற இவர்கள் மூவராலும் எழுதப்பட்ட அரசியலமைப்பு யோசனையே சந்திரிகாவின் நீலன் அஷ்ரப் பீரிஸ் அரசியலமைப்பு யோசனை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



