உலகில் சரிந்துவரும் குழந்தைப்பேறு – தீர்வு என்ன? (வீடியோ இணைப்பு)

உலகில் தோற்றம் பெற்ற விலங்குகளுள் 'சிறப்படைந்த விலங்கு' என்ற தகுதியைப் பெற்ற மனித இனம் இன்று உலகைத் தனது விருப்பத்துக்கு ஏற்ப ஆட்டிப் படைப்பதாக உள்ளது. கைத்தொழில் புரட்சியின் பின்னர் உலகில் ஏற்பட்ட வளர்ச்சி வியக்கத்தக்கது.
மனிதனின் வியத்தகு வளர்ச்சி உலகை மிகவும் சௌகரியம் மிகுந்ததாக மாற்றியுள்ளது. அதேவேளை இத்தகைய அபரிமித வளர்ச்சி உலகின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. மனித குலத்துக்கு இயற்கை வழங்கிய கொடையான இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாகப் பாவிக்கும் போக்கு உலகின் பல பாகங்களிலும் தங்கு தடையின்றித் தொடர்ந்து வருகிறது. இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமும் உள்ளது.
மனித குலத்தின் வளர்ச்சி என்பது தொழில்நுட்பம் சார்ந்த ஒரு விடயத்தில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. மாறாக சந்ததி விருத்தியிலும் அது தங்கியுள்ளது. திருமணம் செய்த பின்னர் அல்லது இணையராகச் சேர்ந்து வாழத் தொடங்கிய பின்னர் குழந்தைகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற வேட்கையுடன் கோடானுகோடி மக்கள் வாழ்கின்ற இதே உலகில் குழந்தைகளே பெற்றுக் கொள்ளத் தேவையில்லை எனும் எண்ணம் கொண்ட மக்களும் சம அளவில் உள்ளதைப் பார்க்க முடிகின்றது.
'மலட்டுத்தன்மை' என வர்ணிக்கப்படும் உயிரியல் ஆற்றலின்மை மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் அதிகரித்து வருவதாக ஒருபுறம் புள்ளிவிபரங்கள் தெரிவிக்க, பல்வேறு காரணங்களைக் கூறிக் கொண்டு குழந்தை பெறுவதைத் தவிர்க்கும் அல்லது தள்ளிப்போடும் செயற்பாடுகளும் அதிகரித்த வண்ணமேயே உள்ளன.
அறிவியலின் வளர்ச்சி சுகாதாரத் துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக முதியோர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருகின்றது. பணி ஓய்வின் பின்னான அவர்களின் பராமரிப்பு இன்று உலக நாடுகளின் அதிகரிசனைக்குரிய ஒரு விடயமாக மாறியுள்ளது. குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி கண்டுள்ளதன் காரணமாக இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள இளம் தொழிலாளர்களின் பற்றாக்குறை, தொழிலாளர்களின் இடங்களுக்கு இயந்திரங்கள் பிரதியீடு செய்யப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள வரி வீழ்ச்சி என்பவை முதியோர் பராமரிப்பு விடயத்தில் அரசாங்கங்களுக்கு பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளன.
ஒன்றுக்கொன்று தொடர்பு பட்ட, ஒன்றில் ஒன்று தங்கியுள்ள இந்த விடயங்கள் தற்போதைய நிலையில் குழந்தை பிறப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றன. குழந்தைப் பிறப்பைத் தவிர்க்க அல்லது தள்ளிப்போட தம்பதியரைத் தூண்டும் காரணிகள் யாவை? இவை தவிர்க்கப்படக் கூடியவையா அல்லது முடியாதவையா? இவற்றைத் தவிர்ப்பதாயின் அந்த முயற்சி யார் கரங்களில் தங்கியுள்ளது? குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் பெருமளவான தம்பதியர் உலகம் முழுவதிலும் ஆர்வமாக உள்ள போதிலும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு, பேர்கள் மற்றும் பொருத்தமான துணை இல்லாமை போன்ற காரணங்களால் அதனைத் தவிர்த்து வருவதாக ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியம் அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வசிக்கும் 14 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஐரோப்பாவில் உள்ள நான்கு நாடுகள், ஆசியாவில் உள்ள நான்கு நாடுகள், ஆபிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டத்தில் தலா மூன்று நாடுகள் என்ற அடிப்படையில் 14,000 பேரிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சனத்தொகை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, அதிக குழந்தைப் பேறு மற்றும் குறைந்த குழந்தைப் பேறு என்ற காரணங்களின் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், மெக்சிகோ, யேர்மனி, நைஜீரியா, தென்னாபிரிக்கா, தாய்லாந்து, தென் கொரியா, இத்தாலி, மொராக்கோ, ஹங்கேரி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.
அதேபோன்று வேறுபட்ட கலாசாரப் பின்னணி, குழந்தைப் பேறு தொடர்பிலான அரசாங்கக் கொள்கைகள் உள்ளிட்ட அடிப்படைகளும் இந்த நாடுகளின் தேர்வுக்குக் காரணங்களாக அமைந்தன. ஆய்வு முடிவுகளின் படி 39 விழுக்காடு மக்கள் தாங்கள் குழந்தைகளைத் தவிர்ப்பதற்கு பொருளாதாரமே காரணம் எனத் தெரிவித்துள்ளனர். குழந்தைகளை வளர்ப்பதற்கான பொதுவான செலவின அதிகரிப்பு, வீட்டு வாடகை உள்ளிட்ட செலவினங்களின் அதிகரிப்பு போன்றவை குழந்தைப் பேற்றை தள்ளிப் போடுவதற்கு அல்லது தவிர்ப்பதற்கான காரணங்களாக உள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். தென் கொரியாவில் வாழும் 58 விழுக்காடு மக்களும் தென்னாபிரிக்காவில் வாழும் 53 விழுக்காடு மக்களும் தாய்லாந்தில் வாழும் 51 விழுக்காடு மக்களும் இந்தக் காரணங்களைக் கூறியுள்ளனர்.
நிச்சயமற்ற தொழில் நிலவரம் மற்றும் எதிர்காலம் தொடர்பான அச்சம் என்பவை காரணமாக குழந்தைகளைத் தவிர்ப்பதாக 21 விழுக்காடு மக்கள் கூறியுள்ள அதேவேளை காலநிலை மாற்றம் முதல் போர் வரையான அச்சமே காரணம் என 19 வீதமான மக்கள் தெரிவித்துள்ளனர். தொழில் அச்சுறுத்தல் காரணமாகக் குழந்தை பெறுவதைத் தவிர்ப்பதாக தாய்லாந்திலும் தென்னாபிரிக்காவிலும் வாழும் 33 வீதமான மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தாலி வாழ் மக்களில் 30 வீதமானோர் இதே கருத்தைக் கொண்டுள்ளனர். 12 விழுக்காடு மக்கள் மாத்திரமே உயிரியல் ஆற்றலின்மை அல்லது கருத்தரித்தல் பிரச்சனை என்பவற்றைக் காரணமாகக் கூறியுள்ளனர்.
தாய்லாந்தில் வாழும் 19 வீதமானோரும், அமெரிக்காவில் வாழும் 16 வீதமானோரும், தென்னாபிரிக்காவில் வாழும் 15 வீதமானோரும் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குழந்தைப் பேற்று வீதம் உலகளாவிய அடிப்படையில் குறைவடைந்து வருவது அவதானிக்கப்பட்ட போதிலும் அதனை அதிகரிப்பதற்கு ஊக்குவிப்பு வழங்க வேண்டும் என்ற சிந்தனையும் உலகளாவிய அடிப்படையில் கவனம் பெற்று வருகிறது. தற்போதைய உலகில் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடான இந்தியாவில் 1970களில் அறிமுகம் செய்யப்பட்ட 'நாம் இருவர், நமக்கு இருவர்' என்ற தொனிப்பொருளுடன் அறிமுகமான குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கம் அந்த நாட்டின் சனத்தொகையைக் குறைப்பதில் பெரிதும் பங்காற்றியது. அன்றைய காலகட்டத்தில் உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடாக அறியப்பட்ட சீனாவில் கடைப்பிடிக்கப்பட்ட 'ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை' என்ற குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறை பலன் கொடுத்த போதிலும், தற்போது அந்தக் கொள்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகின்றது.
இது தவிர, சில நாடுகளில் அரசாங்கங்களும், உள்ளூராட்சி மன்றங்களும் குழந்தைப் பேற்றை ஊக்குவித்து வருகின்றன. அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் தம்பதியருக்கு பல ஊக்குவிப்புகளையும் வழங்குகின்றன. தம்பதிகள் மற்றும் இணையர்கள் காதலிப்பதில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கும் அரசாங்கங்கள் அதற்கான வசதி மற்றும் வாய்ப்புகளை உருவாக்கி வருவதையும் காண முடிகின்றது. ஆண்கள் தொழிலுக்குச் செல்ல பெண்கள் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பராமரிப்பது என்ற உலகளாவிய நடைமுறை கடந்த சில பத்தாண்டுகளாக வெகுவாக மாற்றம் கண்டுள்ள நிலையில் குழந்தைகளைப் பராமரிப்பது என்பது தொழிலுக்குச் செல்லும் பெண்களுக்கு சிரமம் மிக்க ஒன்றாக மாறியுள்ளதைப் பார்க்க முடிகின்றது. குழந்தைப் பேற்றை ஊக்குவிக்க பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறை வழங்கப்பட்டதைப் போன்று தற்போது ஒருசில நாடுகளில் ஆண்களுக்கும் மகப்பேற்று விடுமுறை வழங்கப்படுகின்றது.
உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுள் சுவீடன் நாட்டிலேயே தாய் தந்தை இருவருக்கும் அதிக நாட்கள் மகப்பேற்று விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் 480 நாட்கள் மகப்பேற்று விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும் அந்த நாட்டில் வாழும் 19 விழுக்காடு மக்கள் பொருளாதாரக் காரணங்களுக்காக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது. உலகில் குறைந்த குழந்தைப் பேற்று வீதம் உள்ள நாடுகளுள் ஒன்றாக சுவீடனும் உள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அது தவிர, வீட்டில் இருந்தவாறே பிள்ளைகளை வளர்த்துக் கொள்வதை இலகுவாக்க வீட்டில் இருந்தவாறே தொழில் புரிவதற்கான வசதிகளும் தற்போது பல நாடுகளில் உள்ளது. அதேவேளை, 18 வயது வரையான குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் நடைமுறையும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இத்தனை வசதிகளும் வழங்கப்பட்டும் மேலைத்தேய நாடுகளில் குழந்தைப் பேற்று வீதம் இன்னமும் குறைவாகவே இருந்து வருவதைப் பார்க்க முடிகின்றது. மேலைத்தேய நாட்டு மக்களின் வாழ்வியல் முறைமை ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும் அதனையும் மிஞ்சிய காரணங்கள் உள்ளதை மறுத்துவிட முடியாது.
இந்த ஆய்வில் வாய்ப்புக் கிடைத்தால் எத்தனை குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவதாகப் பதிலளித்துள்ளனர். இவ்வாறு கூறியோரில் 38 வீதமானோர் பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் 35 வீதமானோர் ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர். சராசரியாக குழந்தைப் பேற்று வீதம் பெண் ஒருவருக்கு 2.1 என்ற அளவில் இருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீதத்தில் சரிவு ஏற்படும் போது அது மனித குலத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்கு ஆளாக்குகின்றது. இதனை நிவர்த்தி செய்ய அரசாங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டியது அவசியமாகிறது. தம்பதிகள் அல்லது இணையர்கள் தங்கள் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதற்கான வசதி வாய்ப்புகளை சகல துறைகளிலும் ஏற்படுத்தித் தருவதன் ஊடாக இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை எட்ட முடியும். அதற்கு அரசாங்கங்கள் இதய சுத்தியுடன் முன்வர வேண்டும்.
-சுவிசிலிருந்து சண் தவராஜா-



