யாழ்ப்பாண நன்னீர் தடாக திட்டத்தின் நோக்கம் மற்றும் வரலாற்றுப் பின்னணி

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வறண்ட சம தரையில்
அமைந்துள்ளதால், ஆறுகளோ மலைகளோ இல்லை. இதனால் காலத்திற்குக் காலம் உணவுப்
பஞ்சம் ஏற்பட்டது. மழையை நம்பியே விவசாயம் இருந்தது. இக்குறைபாடுகளை
நீக்கி, யாழ்ப்பாணத்தை வளமாக்க நன்னீர்த் தடாகங்களை அமைக்கும் முயற்சிகள்
பல காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன.
ஓல்லாந்தர் காலத்தில் இருந்து
வன்னி பரப்பின் ஆற்றிலிருந்து நீரை யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குக் கொண்டு
வந்து நன்னீர்த் தடாகம் அமைக்க முயற்சி நடந்தது. பின்னர் ஆங்கிலேயர்
காலத்திலும், சுதந்திர இலங்கையிலும் இதற்கான முயற்சிகள் தொடர்ந்தன.
வடமராட்சி துணைநீர்த்தடாகம் மற்றும் அரியாலை பாலத்து அணைக்கட்டு போன்றவை
இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
முன்னாள் முயற்சிகள் மற்றும் முன்மொழிவுகள்
கனகராய
முதலியார்: "யாழ்ப்பாணச் சரித்திரம்" என்னும் நூலில் திரு.
முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் கூற்றுப்படி, கனகராயன் ஆறு கனகராய
முதலியாரால் வெட்டப்பட்டது. யானையிறவு, இலங்கைக்கும் யாழ்ப்பாணத்திற்கும்
இடையிலான ஒரு பூசந்தியாக இருந்ததாகவும், அதன் வழியாக ஆற்றைக் கொண்டு வந்து
யாழ்ப்பாண விளைநிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச அவர் எண்ணினார் என்றும்
கூறப்படுகிறது.
ஓல்லாந்தர் காலம் (1784): 1784 ஆம் ஆண்டில்,
ஓல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த காலத்தில், மழை குறைவால் உணவுப்
பஞ்சம் ஏற்பட்டது. அந்நேரத்தில், தேசாதிபதி, சுழிபுரம் செல்வநாயக
முதலியார், சரவணமுத்து முதலியார், புலோலிப் பெரிய சிங்கநாயக முதலியார்,
வேலப்ப முதலியார் மற்றும் பிற பிரபுக்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதன் விளைவாக, நெல் விலையை இறக்கி விற்கவும், அற்ப கூலி கொடுத்து இராசகாரியமாகக் கனகராயன் ஆற்றை யானையிறவுக் கடலைத் தூர்த்து, அணை யிட்டு அதன் வழியாகக் கொணர்ந்து யாழ்ப்பாணத்து விளைநிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சவும் தீர்மானம் பண்ணினர் என்று சரித்திராசிரியர் முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் கூறுகிறார். ஆனால் அரசியற் கலகங்கள் காரணமாக ஓல்லாந்தரின் நீர்ப்பாசன வசதித் திட்டங்கள் தடைப்பட்டன.
திரு. F. R. G. வெப்: நீர்ப்பாசன முதல்வரின் வேண்டுகோளின்படி, வடபெருட பாக நீர்ப்பாசன அதிகாரியும் நிபுணருமான திரு. F. R. G. வெப் (Webb) அவர்கள் "யாழ்ப்பாணக் குடா நாட்டுக் கடலேரித்திட்டம் பற்றிய அறிக்கை" ஒன்றை 1942 ஆம் ஆண்டில் எழுதினார். அதில் குடாக் கடலுக்குள் உப்புத்தண்ணீர் புகாமல் தடுக்கும் முறைகளையும் அதனால் சேரும் நன்மைகளையும் விவரித்துக்காட்டியுள்ளார்.
1949 சிறுவனின் கண்டுபிடிப்பு: 1949 ஆம் ஆண்டு மாசி மாதம், யானையிறவுப் பாலத்தின் கிழக்குப்பக்கத்தில் நீர் நன்னீராகவும், மேற்குப்பக்கத்தில் நீர் கசப்பாகவும் இருப்பதை ஒரு சிறுவன் கண்டான். இதற்குத் தந்தையிடம் காரணம் வினவ, சிறுவன் பாலத்தை மணல் ஏற்றிக் கட்டி அடைத்தால் எப்போதும் நல்ல நீராகவே இருக்கும் என்று கூறினான். அதே ஆண்டு கனகராயன் ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நல்ல நீர் பாலத்திற்கு கிழக்குப் பக்கத்திலுள்ள குடாவில் பயன்படாது வீணே கழிந்தது.
திட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு
பாலத்தினூடாக கடல் நீரை கிழக்குப் பக்கத்தினுட்புகாதவாறு தடுத்து வருடம் முழுதும் நல்ல நீராக வைத்துக் கொள்ளுதல் தான் "ஆனையிறவு நன்னீர்த் தடாகத்திட்டத்தின் அடிப்படைச் சாத்திர நுட்பம்".
திட்டத்தின் கூறுகள் மற்றும் செயல்பாடு
யாழ்ப்பாண நன்னீர்த் தடாகத் திட்டமானது பல முக்கிய பகுதிகளைக் கொண்டது:கனகராயன் ஆறு:
இது வவுனியாப் பிரிவில் உற்பத்தியாகி, புளியங்குள-மாங்குளப் பகுதி வழியாகச் சென்று இரணமடுக்குளத்தை நிரப்புகின்றது.
அதன் மிகுதி நீர் யானையிறவு-தொண்டைமானாற்று அணைக்கட்டை அடையும்.
இது யானையிறவிற்கு கிழக்கேயுள்ள குடாக் கடலைச் சேர்ந்து ஆனையிறவுப் பாலத்தினூடாகச் சமுத்திரத்தை அடைகின்றது.
350 சதுர மைல் வட்டார வடிதரையிலிருந்து மழை வெள்ளம் இந்த ஆற்றைச் சேருகின்றது. இத்துடன் மேலும் 120 சதுர மைல் வடிதரை வெள்ளம் ஆனையிறவுக் கடலை அடையும்.
யானையிறவுக் கடலேரி - பிரதம தடாகம்:
யானையிறவு முதல் சுண்டிக்குளம் வரை பரந்து கிடக்கும் இந்நீர்ப்பரப்பு 11,400 ஏக்கர் கொண்டது. இது இரணமடு நீர்ப்பாசனக் குளத்தினும் இரு மடங்கு பெரிதாகும்.
கனகராயன் ஆறு, நெத்தலி ஆறு, பரமெந்தல் ஆறு, தெரவிலாறு முதலிய ஆறுகளிலிருந்து பிரதம தடாகம் நீர் பெறும்.
பாலத்தடியில் அணையும், சுண்டிக் குளத்தின் அருகாமையில் மிகுதி நீர் பாய்தற்கு கட்டும் ஏற்படுத்துவதால், குடாக்கடல் வெள்ள நீர்ப்பெருக்கு யானையிறவு நன்னீர்த் தடாகமாக அமையும்.
இந்தத் திட்ட வேலை மூன்று பிரிவினுள் அடங்கும்:
1. பாலத்திற்குப் பக்கத்தில் கட்டும் அணை கனகராயனாற்று வெள்ள நீரைச் சேகரிப்பதற்கும், மேற்குக் கடலினின்று உப்பு நீர் புகாமல் தடுப்பதற்கும் உதவும்.
2.குடாக்கடலின்
மறு நுனியில் உள்ள, 11 மைல் நீளமுள்ள அணைக்கட்டு அதிகப்படியான வெள்ளப்
பெருக்கு வழிந்து போகவும், சமுத்திரம் வழியாக உப்புநீர் உட்புகாமல்
காக்கவும் பயன்படும்.
3.மேற்றிசையிலும் கீழ்த்திசையிலும் உள்ள கட்டுகள் நன்னீர் தொடர்புக் கால்வாய் அமைப்பிற்கானவை.
தொடர்புக் கால்வாய்:
பிரதம
தடாகத்தில் சேகரித்த நன்னீர்ப்பெருக்கை யாழ்ப்பாணக் குடாநாட்டுள்
செலுத்துவதற்கு 40 அடி அகலமும் 3 மைல் நீளமும் உள்ள ஒரு தொடர்புக் கால்வாய்
அமைக்கப்பட்டுள்ளது.
இக் கால்வாய் மான்பாய்ந்த வாய்க்கால் வழியாக
மண்டலாய் பிள்ளையார் கோவில் பக்கத்தால் சென்று, பெரிய பச்சிராப்பள்ளியில்
வடமராட்சித் துணைத் தடாகத்தை அடையும்.
வடமராட்சித் துணைநீர்த்தடாகம்:
வடமராட்சிக்
குடாக்கடல், பச்சிலைப் பள்ளியைச் சேர்ந்த முல்லியன் பகுதி,
செம்பியன்பற்று, எழுதுமட்டுவாள், வரணி, கரவெட்டி, வல்லைவெளி ஆகிய
பகுதிகளினூடே பரந்திருக்கின்றது.
இக்குடாக்கடல், வல்வெட்டித்துறையை அடுத்த தொண்டைமானாற்றில் சமுத்திரத்தோடு தொடர்புறுகின்றது.
மேலும், இதன் வேறொரு பாகம் சரசாலையிற் பிரிந்து யாழ்ப்பாண நகர்ப்பக்கமாகச் சென்று அரியாலையில் கடலுடன் சேருகின்றது.
இக்குடாக்கடல் ஏறக்குறைய ஒரு மைல் அகலமுடையது.
தொண்டைமானாற்று அணை:
சமீபத்தில் கட்டி முடித்த அறுநூறு அடி நீளமுடைய அணை, வடக்கிலிருந்து கடல் நீர் குடாக்கடலுள் புகாமல் தடுக்கின்றது.
இதன்
அடிப்பாகம் கற்களால் அமைக்கப்பட்டது. 200 அடி மட்டத்தில் இரும்புக்
கதவுகள் உள்ளன. கதவுகளை இயக்குவதற்கு இயந்திரங்கள் பால மேடையில்
பொருத்தப்பட்டிருக்கின்றன.
அரியாலைப் காலத்து அணைக்கட்டு:
யாழ்ப்பாணக்
குடாக்கடல் அரியாலையில் கடலுடன் சேருகின்றது. ஆகையால் உப்பு நீர்
உட்புகாவண்ணம் அங்கு 200 அடி நீளமுடைய அணை கட்டப்பட்டுள்ளது.
நன்னீரைச் சேகரிப்பதற்கும் அணை உதவும். இப்பொழுது சோழகக் காற்று வீசினாலும் உப்பு நீர் உட்புகமாட்டாது.
உவர்ப்பு நீக்குதல் மற்றும் நீர் மேலாண்மை
கனகராயன்
ஆற்று நீர் பிரதம தடாகமாகிய யானையிறவுத் தடாகத்திற்கும் துணைத்தடாகமாகிய
வடமராட்சித் தடாகத்திற்கும் செல்லுதலால் உவர்ப்பு சிறிது சிறிதாக நீங்கும்.
பிரதம
தடாகத்தின் அடிகளில் மண்ணின் தன்மையை உடையதால், உவர்ப்பு நீங்குதல்
துணைத்தடாகத்திலும் விரைவாக நடை பெறும். சிறிது உவர்ப்பான நீர், வாயினில்
விட்டவுடன் உவர்ப்புத் தோன்றினாலும் விவசாயத்திற்கு நன்கு பயன்படும்.
கார்த்திகை,
மார்கழி கால மழைகள் காரணத்தால் பிரதம தடாகமும், துணைத்தடாகமும்
தைப்பொங்கல் நாட்களில் மேல் நீர் மட்டத்தை எட்டிப்பிடித்து, மிகுதி நீர்
கடலினுள் சென்று கொண்டிருக்கும்.
சனவரி மாதக் கடைசியில் பொங்கல்
மழை முடிந்ததும், துணைத் தடாகத்திலிருந்து நீர் வழிதல் நின்று விடும்.
கரைச்சி நிலங்களிலிருந்தும், கனகராயனாற்றிலிருந்தும் நீர் பாய்வதால் பிரதம
தடாகத்து நீர் மேலும் சில காலத்திற்கு வழியும்.
அடுத்து வரும்
இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சூரிய வெப்பம் மிகும். நீர் ஆவியாக
மாறுவதால் தடாகங்களின் நீர் மட்டம் குறையும். ஆனையிறவுத் தடாகத்திலிருந்து
நீர் சென்று நாள் தோறும் துணைத்தடாகத்தை நிரப்பும்.
திட்டத்தின் நன்மைகள்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் ஒரு நன்னீர்த்தடாகம் அமைக்கப்படும்.
நிலத்திற்குக்
கீழ் தங்கும் நீர் அதிகரித்ததும் அதன் மட்டமும் உயரும். காலம்
செல்லச்செல்ல கிணறுகளின் நீர் மட்டமும் சிறிது சிறிதாகக் கூடும்.
மேல் மண்ணில் நீர் ஊறியிருப்பதனால் தாவரங்கள் செழிப்புற்றுப் பச்சைப்பசேல் எனக் காட்சி யளிக்கும்.
தென்னை முதலிய மரங்கள் வெப்பத்தினால் வெந்து காய்ந்து காட்சியளிக்கும் கோடைகாலம் நம் மனத்திரையிலிருந்து அகற்றப்படும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டு நன்னீர்த் தடாகத்திட்டத்தினால் நாடு பலவாறு நயப்பட்டு செழிப்புறும் என்பதில் ஐயமில்லை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



