ராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ நாடுகள் தீர்மானம்

அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. முக்கியமாக, நேட்டோ நாடுகளின் ராணுவ செலவினத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, உறுப்பு நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 5 சதவீதத்தை ராணுவத்துக்கு செலவிட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
முடிவில் இந்த பரிந்துரைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்தன. பின்னர் இது தொடர்பாக மாநாட்டு முடிவில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், 'ராணுவ தேவைகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த செலவினங்களுக்காக 2035ம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை ஆண்டு தோறும் செலவிடுவதற்கு உறுப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளன' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த உறுதிப்பாட்டை 2029ம் ஆண்டு மறு ஆய்வு செய்வதும், ரஷியாவால் நேட்டோ நாடுகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை மறு மதிப்பீடு செய்வதும் இந்த பிரகடனத்தில் அடங்கும்.
இதைத்தவிர நேட்டோ நாடுகள் தங்கள் வழக்கமான பாதுகாப்பு உறுதிப்பாடான 'ஒருவர் மீதான தாக்குதல் அனைவருக்கும் எதிரான தாக்குதலாக' கருதப்படும் என்பதையும் சுட்டிக்காட்டின.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



