பாடசாலைகளில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு இம்மாதம் முதலாம் திகதி நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தமையால் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாக காணப்படுவதாகவும் குறிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அதில் மூவர் பாடசாலை மாணவர்கள் எனவும் அவர் மேலும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பாடசாலையில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 03.06.2025இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், நீரில்மூழ்கி 17பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2025.06.01நேற்று முன்தினம் முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில் கோவில் தீர்த்தக்கேணியில்மூழ்கி இரண்டு பாடசாலைமாணவிகள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ரஜிதரன் கிருசிகா, சற்சொரூபநாதன் ரஸ்மிளா ஆகிய இருமாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் இதுதவிர தாமரைக்குளத்தில் பூப்பறிக்கச்சென்ற இராஜசேகர் நிலாந்தன், சிவநேசன் பிரணவன் ஆகியோருமாக ஒரேநாளில் நான்குபேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் மூவர் பாடசாலை மாணவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறாக ஒரேநாளில் நான்குபேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமையில் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள மாணவர்கள் மூவருக்கும் நீச்சல் தெரியாது. இப்படியாக பல மாணவர்கள் நீச்சல் தெரியாதநிலையில் காணப்படுகின்றனர்.
எனவே பாடசாலைகளில் நீச்சல் தடாகங்களை அமைத்து மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளை வழங்கினால் நல்லதென எண்ணுகின்றேன். தயவுசெய்து இந்தவிடயத்தை கவனத்திலெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



