புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை

வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (11) மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர்களாக சாந்த பண்டார, டீ.பி.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, மஞ்சுளா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் ஏக்கநாயக்க உட்பட அரச உயர் அதிகாரிகள், குருநாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், பெருந்தெருக்கள், காணி, வீடமைப்பு, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் துரிதகதியில் தீர்வுகளை வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியாவது, அரசியல் வேறுபாடுகள் மற்றும் அரசியல் சார்பு நிலைப்பாடுகளுக்கு அப்பால் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
அத்துடன், பொதுமக்களுக்குச் சேவையாற்றும் விடயத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு அதிகாரியும், எந்தநேரத்திலும் அதுதொடர்பில் தன்னைச் சந்திக்க வர முடியும் என்றும், அவ்வாறான சிக்கல்களைத் தீர்த்துவைப்பதற்கு நான் எப்போதும் தயாராக உள்ளேன். என தெரிவித்தார்.



