மோடியின் தலைமைத்துவம் பலருக்கும் தூண்டுகோலாக இருந்துள்ளது! கோபியோ அமைப்பு

இந்திய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று 3 ஆவது முறையாகவும் பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடிக்கு, இந்திய வம்சாவளி மக்களுக்கான உலகளாவிய அமைப்பின் இலங்கைக்கிளை (கோபியோ) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
கோபியோ அமைப்பின் சார்பில் அதன் தலைவர் குமார் நடேசன் அனுப்பி வைத்த வாழ்த்துக் கடிதத்தில், நரேந்திர மோடியின் தலைமைத்துவம் மற்றும் கண்ணோட்டம் என்பன பலருக்கும் தூண்டுகோலாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உங்கள் தலைமைத்துவம், கண்ணோட்டம் என்பன பலருக்கும் தூண்டுகோலாக இருந்து வருவதுடன் நீங்கள் சுபீட்சம் மற்றும் முன்னேற்றம் என்பவற்றை நோக்கி நாட்டை வழிநடத்துவீர்கள் என நாம் நம்புகின்றோம்.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கான உலக அமைப்பு மற்றும் அனைத்து இலங்கைப் பிரஜைகள் சார்பிலும் நீங்கள் இந்தியப் பிரதமராக தேர்தலில் பெற்ற வெற்றி தொடர்பில் எனது இதயபர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பது எனது கொரவமும் பாக்கியமும் ஆகும்.
உங்களது தேசத்தின் சிறப்புக்கான அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. நாங்கள் உங்கள் தலைமைத்துவம் ஆக்கபபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றோம்.
இலங்கையின் அயல் நாடு என்ற வகையில் இந்நாடு இந்தியாவுடனான கூட்டிணைப்பிலிருந்து அநேக அனுகூலங்களைப் பெறுவதுடன் நீங்கள் உங்கள் அயல் நாட்டுக்கொள்கையை தொடர்வீர்கள் என நம்புகின்றோம்.
உங்கள் புதிய வகிபாகத்திற்கும் நாம் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் நீங்கள் இந்தியாவை புதிய உயரங்களுக்கு வழிநடத்துவீர்கள் என்பதில் உமக்கு நம்பிக்கை உள்ளது. மிகவும் தகுதியான உங்களது இந்த வெற்றிக்கு மீண்டும் வாழ்த்துக்கள் உரித்தாகுக என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



