இலங்கையில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு ஆதரவு கரம் நீட்டும் பங்களாதேஷ்!

இலங்கையில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
இந்தியாவின் புதுடில்லியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலில் பங்களாதேஷ் பிரதமர் இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண வைபவத்திற்காக புதுடெல்லி சென்றுள்ளார், அங்கு இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக கூட்டுறவு முறையின் அடிப்படையில் பங்களாதேஷில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை ஆராய்ந்து அதன் அனுபவத்தைப் பெறுவதற்கு இலங்கை விவசாய நிபுணர்கள் குழுவொன்றை பங்களாதேஷுக்கு அனுப்ப ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பாகவும் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்படி, இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்ததன் பின்னர் பங்களாதேஷுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பங்களாதேஷின் தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் பங்களாதேஷ் பிரதமர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தலின் பின்னர் பங்களாதேஷிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி பங்களாதேஷ் பிரதமரிடம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.



