பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை படு குழிக்குள் தள்ளுகின்றனர்!

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களுக்கே பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே செஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார மாற்ற சட்டமூலத்தின் ஊடாக உற்பத்தித்திறனை அதிகரித்து ஒவ்வொரு பிரஜைக்கும் சம வாய்ப்புள்ள நாடாக இலங்கையை மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும்.
மேலும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைக்கொண்ட நாட்டை உருவாக்கவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, பொருளாதார வளர்ச்சிக்கு இணைந்த வகையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன், புத்தாக்கத்துடன் கூடிய ஏற்றுமதி விரிவாக்கப்பட்ட போட்டிச் சந்தையை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சட்டமூலம் பற்றி அறியாதவர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களால் மாத்திரமே பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும். இந்தச் சட்ட மூலத்தில் உள்ள இலக்குகளை அடைய முடியாது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சாதகமான இலக்கைக் கொண்டிருந்தாலும் ஏனைய எதிர்க்கட்சிகள் அரசியல் நோகத்தை மாத்திரமே வைத்துள்ளன.
மேலும், நமது நாட்டில் இலக்குமயப்பட்ட சட்டக் கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படாமையே, பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.



