காசா சிறுவர்களுக்காக இரங்கும் அரசாங்கம் தமிழ் குழந்தைகள் மீது இரக்கம் இல்லையா?

காசா சிறுவர்களுக்காக நிதி வழங்கும் அரசாங்கத்திற்கு இறுதிப்போரில் தமிழ் குழந்தைகள் கொலைசெய்யப்படும் போது இரக்கம் வரவில்லையா என வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
சர்வதேச நீதியினைக்கோரி நாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். எமது போராட்டங்களை தடுக்கும் விதத்தில் பல்வேறு அடக்குமுறைகள் இந்த அரசால்பிரயோகிக்கப்பட்டுவருகின்றது. இருப்பினும் நாம் நீதிக்கான எமது போராட்டங்களில் தொடர்ச்சியாக பயணிப்போம்.
இதேவேளை காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட காசாநிதியத்திற்கு ஜனாதிபதியால் அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது. இந்தநாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இன்னோரு நாட்டிற்கு நன்கொடை வழங்கப்படுகின்றது.
இது தமக்கான ஆதரவினை பெருக்குவதற்கான ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்க முடியும். ஏனெனில் எமது தமிழ் சிறுவர்கள் பலரை இறுதி போரின்போது கையில் ஒப்படைத்திருந்தோம். அதேபோல இறுதிபோரில் எத்தனை அப்பாவி தமிழ்க்குழந்தைகளை கொலைசெய்தனர்.
அப்போதேல்லாம் இவர்களுக்கு இரக்கம் வரவில்லையா. போரில் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து, அவயவங்களை இழந்த பிள்ளைகளை இவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா. தாங்கள் நடாத்திய போர் என்ற படியால் அது கண்ணுக்கு தெரியவில்லை.
எனவே எமது பிரச்சனைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படவேண்டும். அதற்கு அனைத்து நாடுகளும் பரிந்துரை செய்யவேண்டும் என்றனர்.



