நாட்டின் சில பகுதிகளில் 150 மி.மீற்றர் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது.
மேலும், தென்மேற்கு பருவமழை படிப்படியாக தீவு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என்றும், தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, தீவின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் தென் மாகாணத்திலும் காற்று (40-50) கி.மீற்றர் வரை வீசுவதுடன், தீவின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும், இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



