தேசிய மக்கள் சக்திக்கும் மன்னார் பிரஜைகள் குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பு!

தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி)கட்சிக்கும் மன்னார் பிரஜைகள் குழுவுக்கும் இடையே விசேட சந்திப்பு இன்று (21.05) மன்னார் பிரஜைகள் குழுவில் இடம் பெற்றது.
தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி)கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினருக்கும், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளாருக்கும் இடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் வடமாகாண கடல் தொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலமும் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது ஜே.வி. பி கட்சியினர் இரண்டு பிரதான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜே.வி.பி கட்சியில் போட்டியிடும் அனுரகுமார திசாநாயக்க மன்னார் மாவட்டத்தில் ஆதரவற்ற தன்மை காணப்படுவது தொடர்பில் கருத்து வெளியிட்டதுடன், மக்களின் ஆதரவை பெறுவது தொடர்பிலும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை மாலை அனுரா குமார திசாநாயக்க மன்னருக்கு வருகை தந்து மக்கள் சந்திப்பில் ஈடுபடவுள்ளார்.
இந்த நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிய மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் தற்போது மன்னார் மாவட்டத்தில் காணப்படும் 10 பிரதான பிரச்சனைகள் குறித்து தெளிவாக தமது கருத்தை முன் வைத்தார்.
குறித்த விடயங்கள் தொடர்பில் ஜே வி பி கட்சி கரிசனையுடன் செயல்பட்டு முன்னிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக காற்றாலை மின்சாரம், கனிம மணல் அகழ்வு, காணிகள் அபகரிப்பு, இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றமை,மன்னார் மாவட்ட இளைஞர்கள் பட்டதாரி இளைஞர்கள் கைவிடப்பட்ட நிலையில் வேலையற்று காணப்படுவது, மன்னார் மாவட்ட பாடசாலைகளின் வளங்கள் பற்றாக்குறை, இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல், மன்னாரில் உள்ள ஒட்டு மொத்த வளங்களும் திட்டமிட்ட வகையில் அளிக்கப் படுகின்றமை, முறை கேடாக அரசியலில் பின் புலத்தில் அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணை, இறால் பண்ணைகள் மீன் பண்ணைகள் மற்றும் மன்னார் நகரப் பகுதியில் அகற்றப்படாத திண்மக் கழிவுகள் குறித்தும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளாரினால் முன் வைக்கப்பட்டது. ஷ
இதன் போது குறித்த கருத்துக்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் கோரிக்கைகள் தமது கட்சியின் உயர் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி)கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



