இலங்கையில் ”ஸ்டார் லிங்க்” சேவையை நடைமுறைப்படுத்த மஸ்குடன் ரணில் கலந்துரையாடல்!

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தையொட்டி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோடீஸ்வரரும் முதலீட்டாளருமான எலோன் மஸ்க்கைச் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையில் ‘ஸ்டார்லிங்க்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விக்கிரமசிங்கவும், மஸ்க்கும் கலந்துரையாடியுள்ளனர்.
உலகளாவிய “Starlink” வலையமைப்புடன் நாட்டை இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியுடன் இரண்டு நாள் இந்தோனேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், “இலங்கையின் மீட்சி, பொருளாதார ஆற்றல் மற்றும் முதலீட்டுக்கான புதிய வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதியும் எலோனும் கலந்துரையாடினர்” என ட்வீட் செய்துள்ளார்.
"இலங்கைக்காக தொலைநோக்கு பார்வை கொண்ட இரண்டு தலைவர்கள் ஒன்று சேர்வது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் அவர் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.



