இலங்கை வானிலையில் ஏற்பட்ட அசாதாரண மாற்றம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உருவாகி வரும் முந்திய பருவ காலநிலை அம்சங்கள் காரணமாக எதிர்வரும் நாட்களில் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் குறிப்பாக மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறையிலும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (0-10) N (60-90) E ஆல் சூழப்பட்ட கடற்பரப்புகளிலும் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொதுமக்கள், மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



