“ உலக தொழிலாளர்களே ஒன்றுப்படுங்கள்” : சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்று!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #may day
Dhushanthini K
2 weeks ago
“ உலக தொழிலாளர்களே ஒன்றுப்படுங்கள்” : சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்று!

இந்த உலகத்தில் அன்றுத்தொட்டு இன்றுவரை மாறாத ஒருவிடயம் என்றால் அது வர்க்க பிரிவினை தான். ஆரம்ப காலங்களில் அதாவது மன்னராட்சி காலங்களில் ஆண்டான், அடிமையாக தோற்றம் பெற்ற வர்க்க பிரிவினைகள் காலம் காலமாக பெயர் மாற்றங்களை மட்டும் கண்டுவந்துள்ளதே தவிர அதன் அர்த்தப்பாடுகளில் மாற்றங்களை காணவில்லை. 

முதலில் ஆண்டான், அடிமை சமூகம், பிறகு முதலாளி, தொழிலாளர் வர்க்கம் தற்போது இருப்பவர்கள், இல்லாதவர்கள் வர்க்கம் அவ்வாளவு தான் வித்தியாசமே ஒழிய வேறு எதிலும் நாம் வேறுபாடுகளை கண்டிருக்க மாட்டோம். 

இருப்பவர்கள் இல்லாதவர்களிடம் இருந்து சுரண்டி வாழும் முறை ஆரம்பகாலங்களில் இருந்தே இருந்து வந்துள்ளதை வரலாறுகள் கூறுகின்றனர். குறிப்பாக தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் தன்மை இருக்கத்தான் செய்கிறது. தற்போதும் பல இடங்களில் இதை காணக்கூடியதாக இருக்கிறது. 

இப்படி ஒரு நீண்ட வரலாற்றை கொண்டதுதான் இந்த உழைப்பாளர் தினம்.  அமெரிக்காவில் 1890ஆம் ஆண்டு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். 

இதை எதிர்த்து அமெரிக்க அரசு, ஈவிரக்கம் அற்ற தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்ப்ட்டனர். உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஒழித்துக்கட்டி தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்துவிதமான துன்பங்களும் தீரும் என்றும், முதலாளிகள் உலக வரலாறின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருகின்றனர் என்றும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்றும் கூறி இதையெல்லாம் செய்வதற்கு, "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என பொதுவுடைமைக் கொள்கையை உலகிற்குத் தந்த ஒப்பற்ற ஆசான் கார்ல்மார்க்ஸ் அவர்களின் குரல் தான் இன்று உழைப்பாளர்கள் சுதந்திரமாக செயற்பட வித்திட்டது என்றால் அது மிகையாகாது. 

இவ்வாறு அவர் கூறி 42 ஆண்டுகள், உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் இந்த வெற்றி நிலைநாட்டப்பட்டது. தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது. தொழிலாளர்களின் உழைப்பு இன்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை என்பதை உணர்ந்தனர். 

தாம், விலங்குகளைவிட கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும், உழைப்பின் பலன்களை எல்லாம் அனுபவிக்கும் முதலாளிகள், தொழிலாளர்களை வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும்படி செய்கின்றனர் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு உரிமைக்காககப் போராடினர். 

1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பயிபுரிந்த தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். 

தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து இடம்பெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். 

 அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. 

 இவ்வாறு உலகெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் இதற்கான வெற்றியை அடைந்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்த அரசு அவர்களின் கோரிக்கையை 1890ஆம் ஆண்டு ஏற்றது. தொழிலாளர்களின் இந்த வெற்றியை குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக மே தினம் என்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

உலகவாழ் சொந்தங்கள் அனைவருக்கும் Lanka4 இன் மே தின வாழ்த்துக்கள்.........!