வடக்கு அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் - பியல் நிஷாந்த

வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டால் மீனவர் பிரச்சினைக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு காண முடியும் என மீன்பிடித் துறை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினையாகும். உண்மையில் இது எமது கடல் வளத்தை கொள்ளையடிக்கும் செயற்பாடாகும்.
சிலர் தமது அரசியலுக்காக இந்த பிரச்சினையை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
இந்தியாவை விட கடுமையாக இலங்கையில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் எம்மால் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளும் போதுமானவையல்ல என்பதை நாமும் தெளிவாக அறிவோம். எவ்வாறிருப்பினும் இது கடற்றொழில் அமைச்சருடைய பொறுப்பு மாத்திரமல்ல. வடக்கு மீனவ மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரச தலைவர்களினதும் பொறுப்பாகும்.
அரசியல் பேதங்களை துறந்து வடக்கு அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் பங்கு பற்றி தமது ஒத்துழைப்புக்களை வழங்கினால் இந்த பிரச்சினைக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு காண முடியும்.
அதனை விடுத்து தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டு, அவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வராமலிருப்பது ஒழுக்கமான செயற்பாடல்ல.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்லது கடற்றொழில் அமைச்சர் மாத்திரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை.ஜே.வி.பி. உட்பட பலரும் இந்தியா செல்கின்றனர். அங்கு சென்று பால் உற்பத்தி நிலையங்களுக்கு செல்பவர் கள் மீனவர்களின் பிரச்சினை குறித்து ஏன் பேசவில்லை? ஆனால் மீனவர் மீது போலியான அக்கறை கொண்டுமுதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டு உலகில் இடம்பெறும் சகல மீனவர் மாநாடுகளிலும் பங்கேற்கின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.



