இலங்கையில் நீதி இல்லை என்றவர்கள் தமது கட்சிக்காக நீதிமன்றை நாடியுள்ளனர்: டக்ளஸ்
இலங்கையில் நீதி செத்துவிட்டது என போராட்டம் நடத்தியவர்கள் இன்று தமது உட்கட்சி பிரச்சினைக்கு நீதி வேண்டி இலங்கை நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் சனிக்கிழமை (02) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள், இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை என்றவர்கள், முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டுப்போனதை வைத்து இலங்கையில் நீதி செத்துவிட்டதென்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியவர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றவர்கள், தமது உட்கட்சி விவகாரத்துக்கு தீர்வு கோரி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினை என்றால் அது தீர்ந்துவிடக்கூடாதென்று சர்வதேச நீதிமன்றத்துக்கும் போவோம் என்பார்கள்.
தமது பிரச்சினை என்றவுடன் அதை இலகுவாக தீர்க்கும் விருப்பத்தோடு இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதிலிருந்து இவர்களது அரசியல் நாடக வேடம் முற்றாக கலைந்துவிட்டது" என்றுள்ளது.