மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அதிருப்தியில் அமைச்சர்

#SriLanka #Bank #Central Bank
Mayoorikka
2 months ago
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: அதிருப்தியில் அமைச்சர்

நாட்டின் பொருளாதாரம் பூச்சிய நிலைமைக்கு வீழ்ச்சியடையக் காரணமாகவிருந்த மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தியமையில் நான் அதிருப்தியடைந்துள்ளேன். 

மக்கள் தம் வாழ்வை அர்ப்பணித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஒழுக்கமற்ற செயலாகும் என்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய வங்கியைச் சுயாதீனமாக்குவது குறித்த தீர்மானம் தொடர்பில் நான் அதிருப்தியும், கவலையும் கொண்டுள்ளேன்.

 நாட்டின் பொருளாதாரம் பூச்சிய நிலைமைக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு பிரதானமாகப் பொறுப்பு கூற வேண்டிய அரச நிறுவனம் மத்திய வங்கியாகும். மத்திய வங்கி அதன் பொறுப்புக்களிலிருந்து விலகிச் செயற்பட்டமை மறுக்க முடியாத காரணியாகும்.

 நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாம் உட்பட சகலரும் அர்ப்பணிக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் மத்திய வங்கி மாத்திரம் தமக்கான சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்கு எடுத்துள்ள தீர்மானம் ஒழுக்கமற்றது என்றார்.