நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்!

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக இம்மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் பயணித்த படகொன்று அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
படகோட்டி ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடன் எல்லை தாண்டி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது 19 தமிழக மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட தமிழக மீனவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இந்த வழக்கு நேற்று ஊற்காவற்றுறை நீதவான் ஜே .கஜநிதிபாலன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தமிழக மீனவர்கள் 19 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
ஒரு படகின் உரிமையாளர் குற்றம் இடம்பெற்ற போது படகில் இருந்தமையால், அந்த படகை அரசுடைமையாக்கி நீதவான் உத்தரவிட்டார்.
மற்றைய படகின் படகோட்டி ஜி.பி.எஸ். கருவியை பாவித்தும் எல்லை தாண்டியமையால், அவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டணை விதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
ஏனைய 18 மீனவர்களும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டளை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.



