நடிகை திரிஷாவிற்கு கலங்கம் தெரிவித்தவர்களுக்கெதிராக பேசிய முன்னாள் அமைச்சர்

#Cinema #Actress #TamilCinema #Harassment
Mugunthan Mugunthan
2 months ago
நடிகை திரிஷாவிற்கு கலங்கம் தெரிவித்தவர்களுக்கெதிராக பேசிய முன்னாள் அமைச்சர்

“பெண்மையை இழிவுபடுத்தக் கூடாது. நடிகை த்ரிஷா மிகவும் மனம் வருந்தி அந்தப் பதிவை எழுதியிருக்கிறார். அந்த காணொலியில் பேசப்பட்ட விஷயங்களை கேட்கும்போதே அருவருப்பாக இருந்தது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 யூடியூப் பேட்டி ஒன்றில் பேசிய சேலத்தை சேர்ந்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஒருவர், கூவத்தூர் சம்பவம் குறித்து சில சர்ச்சையான கருத்துகளை பகிர்ந்தார். அதில் நடிகை த்ரிஷா குறித்து பேசிய கருத்துகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

 இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை த்ரிஷா எச்சரித்ததையடுத்து, பகிரங்கமாக மன்னிப்புக் கோரி அந்த நபர் வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷாவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

 சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண்மையை இழிவுபடுத்தக் கூடாது. நடிகை த்ரிஷா மிகவும் மனம் வருந்தி அந்தப் பதிவை எழுதியிருக்கிறார். அந்த காணொலியில் பேசப்பட்ட விஷயங்களை கேட்கும்போதே அருவருப்பாக இருந்தது.

 அதிமுக பொதுச் செயலாளர் குறித்தும் அந்த நபர் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார். நடிகை த்ரிஷா குறித்து அவர் பேசிய இழிவான கருத்துகள் என்பது மனித சமுதாயம் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம். அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீதான நடவடிக்கை குறித்து கட்சி முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.