நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்திற்குள்ளானது!

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (13.02) அதிகாலை 1.00 மணியளவில் புத்தளம் - அனுராதபுரம் வீதியில் இடம்பெற்றுள்ளது.
மேல் புளியங்குளம் - அளுத்கம பகுதியைச் சேர்ந்த எச்.எம்.ஹர்ஷன பிரதீப் என்பரே விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலி சப்ரி புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது, அவருடைய கார், அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்றவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காரின் சாரதி சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



