வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சுதந்திரம் இல்லை என்பதை கிளிநொச்சி சம்பவம் காட்டியுள்ளது!

ஆயுதமின்றி தமது உரிமைகளுக்காக போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறையை இலங்கையின் சுதந்திர தின நாளிலும் தோலுரித்து காட்டுகிறது என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற சுதந்திர தினத்திற்கெதிரான கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழர்கள் இவ்வாறான போராட்டங்களின் மூலம் தான் இழந்தவற்றை பெறமுடியும் என பலருக்கும் தெரியும். இங்கு ஆயிரம் இரண்டாயிரம் பேர் இருந்திருந்தால் பரவாயில்லை. என்னை பொறுத்தவரை வீசப்பட்ட புகைக்குண்டு, பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பெண்கள் மற்றும் மாணவர்களை தாக்கியது இதுவெல்லாம் ஒரு வேண்டப்படாத செயல்.
அவர்கள் இவ்வாறு செய்ததன் மூலம் உண்மையிலே பெரும்பான்மைக்குரிய சுதந்திர தினத்திலே அவர்கள் தங்களுக்கு தாங்களே கறையை ஏற்படுத்தி விட்டார்கள்.
தமிழர் தாயகத்தில் எமக்கு சுதந்திரம் இல்லை என்பதை இன்றைய நாளும் ஒரு சான்றாகும் .இன்று தமது செயல்களால் இந்த போராட்டத்தினை உலகறிய செய்துவிட்டார்கள்.” என அவர் மேலும் தெரிவித்தார்.



