முல்லைத்தீவில் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் உள்ள மக்கள் பிரச்சினை: தீர்வுக்காக காத்திருக்கும் மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் கடந்த மாதம் பெய்த அடை மழை காரணமாக தேராவில் குளத்தில் மேலதிக நீர் வெளியேறாது தடைப்பட்டுள்ளதால் குளத்தின் அருகாமையில் அமைந்துள்ள சுமார் பதினொரு வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் வசித்து வந்த மக்கள் இடைத்தங்கள் முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.
சுமார் ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையில், இது தொடர்பில் ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது. மாவட்டச் செயலகத்தின் அறிவுறுத்தலிற்கு அமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபை , கமநல சேவைகள் திணைக்களம், வனவளத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு என்பன புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் பின்னர் குறுங்கால நீண்ட கால ரீதியில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பல்வேறு முன்மொழிவுகளைச் செய்துள்ளன.
ஆனாலும் நீர் வெளியேற்றப்படவில்லை இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் விநநோகராதலிங்கம் கடந்த வாரம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து இவ்வாரம் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் அனைவரையும் குறித்த பகுதிக்கு அழைத்து வந்து தீர்வை பெற்றுத்தருவதாக மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது கோரிக்கையின் பேரில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தானின் ஏற்பாட்டில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட செலாளர் உமாமகேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் உட்பட பல அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிப்புற்ற தேராவில் பகுதிக்கு விஜயம் செய்து அங்கு கிராம் மக்களையும் இணைத்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் குறுங்கால நீண்ட கால ரீதியில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாகவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் தீர்வுகாண 25 மில்லியன் நிதி கோரப்பட்டிருந்தது இவ்வாறான நிலையில் தற்காலிகமாக உடனடியாக செய்யக்கூடிய வேலையாக இதற்கு குறைந்த செலவறிக்கை மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பில் அனைவரும் ஆராய்ந்து பார்த்து எதிர்வரும் 6 ம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
மிக விரைவாக தமக்கு தீர்வை வழங்குமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக 6 ம் திகதி கலந்துரையாடி மக்களுக்கு விரைவாக தீர்வை பெற்றுக் கொடுப்பதாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் .



