நானாட்டான் பிரிவில் உள்ள காணியை உடனடியாக பகிர்ந்தளிக்குமாறு கோரி போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் உள்ள காணியை உடனடியாக பகிர்ந்தளிக்குமாறு கோரி இசைமாளத்தாழ்வு கிராம மக்கள் இன்றைய தினம் புதன்கிழமை (31.01) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
46 ஏக்கர் காணியானது வன வள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் குறித்த காணியை விடுவித்து நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இசைமாலைத்தாழ்வு கிராமத்திற்குற்பட்ட 113 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் பிரிதொரு கிராமத்தைச் சேர்ந்த இருவர் அத்துமீறி நுழைந்து பல ஏக்கர் காணிகளை அடாத்தாக பிடித்து வருகின்றனர். எனவே குறித்த காணியை அவர்களிடம் இருந்து மீட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதேவேளை இசை மாலைத்தாழ்வு கிராமத்தில் மக்களுக்கு குடி இருக்க காணி இல்லாத நிலையில் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஒரு வீட்டில் இரண்டிற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு நாட்டின் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து குறித்த காணியை இசைமாலைத்தாழ்வு மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



