காணாமல் ஆக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கறுப்பு ஜனவரி போராட்டம்!

மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ஊடகவியலாள்கள் இன்று சனிக்கிழமை காந்தி பூங்கா முன்னால் கறுப்புப்பட்டி அணிந்து போரட்டம் முன்னெடுத்தனர்.
இன்று கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகவியலாளர்கள் மதகுருமார், சமூகசேவைகள் செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமல் போன உறவுகளின் சங்கம் உட்பட பலர் காந்தி பூங்காவின் முன்னால் ஒன்றிணைந்தனர்.
இதன்போது “படுகொலை செய்யப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற சர்வதேச விசாரணை வேண்டும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து, படுகொலை செய்யப்பட்டு கடத்தப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கொடு, எங்கே எங்கே ஊடகவியலாளர் எக்னியாகொட எங்கே, நிகழ் நிலை காப்பு சட்டத்தை வாபஸ்பெறு” போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு தலையில் கறுப்பு பட்டி அணிந்து கோஷங்கள் எழுப்பியவாறு ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேறினர்.



