யார் இந்த சனத் நிஷாந்த - அவரின் அரசியல் பயணம் எவ்வாறு ஆரம்பித்தது! பிரத்தியேக செய்தி

பொதுஜன பெரமுனவின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த 1975 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி சிலாபத்தில் பிறந்தார்.
இவருக்கு ஒரு மூத்த சகோதரியும் மூன்று சகோதரர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சனத் நிஷாந்த சிலாபம் செயின்ட் மேரி ஆண்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர். சட்டத்தரணி சாமரி பெரேராவை மணந்த சனத் நிஷாந்த, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனின் தந்தையாவார்.
இதேவேளை, அவரின் அரசியல் பயணத்தைப் பார்ப்போமானால்,
1997ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு போட்டியிட்ட போதிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
அதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரான சரத் ஹேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், ஆராச்சிக்கட்டுவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பு சனத் நிஷாந்தவுக்குக் கிடைத்தது.
அதனையடுத்து, 2004 ஆம் ஆண்டு வடமேற்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற அவர் 2009 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
பின்னர் 2010 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி, அவர் வடமேற்கு மாகாண சபையின் மீன்பிடி, நெடுஞ்சாலைகள் மற்றும் மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் 62,996 விருப்பு வாக்குகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் முதலாவதாகத் தெரிவான அவர், அதனையடுத்து, அமைச்சராகவும் பதவியேற்றார்.
அந்த மாகாண சபையில் ஒரு காலத்தில் பதில் முதலமைச்சராகவும் அவரால் பதவி வகிக்க முடிந்தது. 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 80,082 விருப்பு வாக்குகளைப் பெற்ற சனத் நிஷாந்த நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கடற்றொழில் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றதுடன், அதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து அதிகூடிய வாக்குகளை பெற்ற வேட்பாளரானார்.
அவர் இறக்கும் போது, நீர் வழங்கல் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.
நேற்றிரவு சிலாபம் – பண்டாரவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண விருந்தில் கலந்து கொண்டுவிட்டு கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த சனத் நிஷாந்த, கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



