இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்த பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்கும்! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உறுதி
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றுவ் பெற்றிக் மற்றும் நீதி, சிறைச்சாலை நடவடிக்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (19) நீதி அமைச்சில் இடம்பெற்றது.
இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட மறுசீரமைப்பு தொடர்பாகவும் அந்த மறுசீரமைப்பு பொருளாதார இலக்கை அடைந்துகொள்வதற்கு தாக்கம் செலுத்தும் முறை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் பங்குபற்றலுடன் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக சட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பரந்தளவில் கவனம் செலுத்தியிருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் காரணமாக சில சட்டங்களை செயல்வலுப்பெறச்செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தார்.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக பிரித்தானியாவின் ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் இதன்போது உறுதியளித்ததாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.