இராணுவத்தினை கொண்டுவந்து அடக்கினால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் : தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!
சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (16.01) காலை 6.30 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 35,000 உதவித்தொகையை தங்களுக்கும் வழங்கக் கோரி சுகாதார சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
சுகாதார அமைச்சர் தனது கோரிக்கைகள் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலையும் வழங்கவில்லை என மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இன்று வரை, சுகாதார அமைச்சர் இந்தத் தொழில்கள் தொடர்பாக எந்த ஒரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை.
எனவே, 72 துணை மருத்துவ சேவை, மருத்துவமனை செயலாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள், அத்துடன் சுகாதார நிர்வாக உதவியாளர்கள் மற்றும் குறிப்பாக சுகாதார உதவியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இராணுவத்தை பயன்படுத்தி வேலைநிறுத்தத்தை ஒடுக்கினால், போராட்டத்தை தொடர்ந்து நடத்த நேரிடும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.