பிரித்தானிய இளவரசியின் யாழ் விஜயம்: பெருமிதமடையும் கன்சர்வேடிவ் கட்சி
இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர், வட மாகாணத்துக்கான விஜயம் பெருமைமிக்க தருணம் என பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சியின் தமிழர் பழமைவாதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை ஏற்பாடு செய்த வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்துக்கும் அந்த அமைப்பு நன்றி கூறியுள்ளது. அத்துடன், வட மாகாணத்துக்கான முதல் அரச பயணமாக இளவரசி ஆனின் பயணம் அமைந்துள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசியும் மன்னர் சார்ள்சின் இளைய சகோதரியுமான ஆன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அதன்போது, பிரித்தானிய இளவரசிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறிலங்காவின் 75 வது சுதந்திர தினத்தை மையப்படுத்திய பவளவிழா நிறைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இரண்டு நாடுகளின் ராஜதந்திர உறவின் 75 வது ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் இளவரசி ஆனின் பயணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.