யாழில் வலி நிவாரணி என போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக ஊழியர் கைது!
வலி நிவாரணி மாத்திரைகள் என கூறி போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படும் மருந்தகத்திலிருந்து 250 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, மருந்தகத்தின் ஊழியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், போதை மாத்திரைகளுடன் நடமாடிய மேலும் ஒருவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் 1,100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இரண்டு பெட்டிகளில் 250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
இந்த மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக கூறும் பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.