தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அரசியல் அறிவு உள்ள நபரே பொருத்தம்! யாழில் சாணக்கியன்
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அரசியல் அறிவு உள்ள நபர் ஒருவரே பொருத்தமான ஒன்றாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக்கட்சி என்பது ஜனநாயக கட்சி. அதன் தலைமைத்துவம் ஜனநாயக ரீதியிலேயே தெரிவு செய்யப்படும்.
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழரசுக் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்பதை மக்கள் புரிந்துவைத்துள்ளார்கள்.
கட்சியின்தலைவராக வர வேண்டியவர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை சர்வதேச அளவிற்கு எடுத்துச் செல்லவேண்டிய சர்வதேச தொடர்புகள் உள்ள நபராக இருந்தால் மட்டுமே சாத்தியம் .
தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் ஊடாகவே அரசியல் தீர்வு காண முடியும். அதற்காவே தமிழரசுக் கட்சி செயற்பட்டுக்கு கொண்டது உள்ளது.
இந்த நிலையில் அரசியல் சாசனம் தொடர்பில் அதீத அறிவு உள்ள நபர் ஒருவரே தமிழரசுக் கட்சியின் தலைவராக வர வேண்டும் என சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.
மேலும் அதாவது அதிகார பகிர்வினூடாக மட்டுமே எங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும். டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக வடக்கில் இருக்கிறார். அவரால் வடக்கில் பிரச்சினை மட்டுமே இருக்கிறது. அவரால் அவருடைய துறை சம்பந்தமான பிரச்சினையை மட்டுமே கையாள முடியும்.
ஏனைய பிரச்சினைகளை எவ்வாறு அவரால் தீர்க்க முடியும்? ஆகவே எங்களுக்கு அதிகாரங்கள் கிடைத்தால் நாங்களே எங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
இந்த அரசியல் தீர்வுக்காகவே எங்கள் கட்சி செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆகவே அரசியல் சம்பந்தமாக பரந்த அறிவு ஆழமாக இருக்க வேண்டியது அவசியம்.
இதை தெரிந்த ஒருவர் தான் தலைவராக வரமுடியும். இவ்வாறான விடயங்களை நாங்கள் முன்வைக்கும் போது சர்வதேச ரீதியாக நாங்கள் ஆதரவை திரட்ட வேண்டும்.
சர்வதேச தொடர்புகள் இருந்தால் தான் மாற்றங்களை செய்ய முடியும். அத்தோடு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களையும் கொடுக்க முடியும். மொழி மட்டும் சர்வதேச தொடர்பில் ஆதிக்கம் செலுத்துவதில்லை.
விடயங்களும் தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலமாக நாங்கள் ஆதரவை எடுத்து நடைமுறைப்படுத்துவதும் முக்கியமாகும். இந்த 2 தகுதிகளும் தலைவருக்கு அவசியமாகும்.
அவ்வாறான தகுதி என்னிடம் இருந்தால் நானே தலைவர் பதவிக்கு குதித்து விடுவேன். இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் எனக்கும் அந்த தகுதி வரலாம்.
நான் எனது பெயரை ஏன் கொடுக்கவில்லை என்றால், எனக்கு தகுதி இன்னும் வரவில்லை. நான் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். எனவே தமிழரசுக்கட்சியின் தலைவராக யார் வரவேண்டுமென்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறான சூழலில் தனது தலைவரை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைத்துள்ளது. எங்களுடைய கட்சி எங்கள் பிரதேசத்தில் பிளவுபடாமலே செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது.
கட்சிக்குள் நடக்கும் விடயங்கள் கட்சிக்குள் பிளவு என்பது அல்ல. எனவே அனைவரும் நிலைமைகளை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.