பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு ஆதரவு வழங்குவதா? மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்! பேராசிரியர் கருத்து
பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்களை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக்கூற வேண்டும்.
2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு ஆதரவு வழங்குவதா? அல்லது பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை முன்வைக்கும் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2024 ஆம் ஆண்டு அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும்.பொருளாதார பாதிப்புக்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறார்.

பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்களை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக் கூற வேண்டும். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வரையறையற்ற வகையில் சர்வதேச பிணைமுறியங்களில் இருந்து பெற்றுக் கொண்ட கடன்களினால் இலங்கையில் அரசமுறை கடன்கள் நெருக்கடிக்குள்ளானது. நல்லாட்சி அரசாங்கத்தில் நாடு வங்குரோத்து நிலையடைந்திருக்க வேண்டும்.
வங்குரோத்து நிலையை ரணில் விக்கிரமசிங்க பிற்போட்டார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷவின் ஆட்சியில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது.முறையான முகாமைத்துவமில்லாததால் வங்குரோத்து நிலைக்கு செல்ல நேரிட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போதைய பொருளாதார பாதிப்பின் ஒரு பங்குதாரர். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு ஆதரவு வழங்குவதா ? அல்லது பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான திட்டங்களை முன்வைப்பவர்களுக்கு ஆதரவு வழங்குவதா ? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.