இந்திய பிரித்தானிய அரசுகள் மலையக தமிழரின் வளர்ச்சியில் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும்!
மலையகத் தமிழர்களின் வளர்ச்சிக்கு இலங்கை, இந்தியா, பிரித்தானிய அரசுகள் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
மலையக மக்கள் முன்னணி சார்பில் நுவரெலியாவில் நடைபெற்ற “200ல் மலையக மாற்றம்” விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது எதிர்கால வளர்ச்சிக்கு உதவிட வேண்டிய தார்மீக கடப்பாடு இன்று, இந்திய, பிரித்தானிய அரசுகளுக்கு உண்டு.

அதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் நிறைவேற்ற வேண்டும்.
கடந்த வாரம் நானும், இராதாகிருஷ்ணனும் இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதுவர் அன்ரூ பெட்ரிக்கை சந்தித்த போது, இதை நான் அவருக்குத் தெளிவாக எடுத்துக் கூறினேன்.
தற்போதைய பிரிட்டிஷ் மன்னர் சார்ள்சின் அரசு எமக்கு உதவிட வேண்டும். இந்தியாவின் கடப்பாடு பற்றி நான் பலமுறை இந்திய தலைவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளேன்.
அதேவேளை, இலங்கையின் கடப்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் நிறைவேற்ற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.