கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு !
தேசிய பாதுகாப்பு தின நிகழ்வானது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடிஏற்றிவைக்கப்பட்டது.
தேசியக்கொடியினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அனர்த்தங்களால் உயிரிழந்த மக்கள் நினைவாக இரண்டு நிமிட அகவணக்கம் இடம்பெற்றதனை தொடர்ந்து ஆழிப்பேரலையில் இறந்த உறவுகளுக்காக சுடர்கள் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலை அனர்த்தமானது இடம்பெற்று இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.
ஆசிய பிராந்திய கடலோர மக்களுக்கு 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ‘சுனாமி'யாக வந்த இயற்கை அனர்த்தம் அழிக்கமுடியாத கரைபடிந்த சுவட்டினைப் பதித்து விட்டது.
இந்து சமுத்திரத்தின் அருகில் உள்ள இந்தோனேசியாவின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான சுமாத்திரா தீவின் வடக்கே கடலுக்கு அடியில் காலை 6.58 மணிக்கு 9.0 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கமானது சுனாமியைத் தோற்றுவித்தது.

சுனாமி பேரலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் என 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 676 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
குறிப்பாக அதிகளவான அழிவுகளை எதிர்கொண்ட இரண்டாவது நாடு இலங்கையாகும். இங்கு சுமார் 35,322 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பு தினத்தில் அனர்த்தத்தினால் உயிரிழந்த அனைத்து உயிர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனையும் இடம்பெற்றது