மேலும் 12 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. காசா மீது மும்முனை தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்த பகுதி நிர்மூலமாகி உள்ளது.
14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுமார் 1½ மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் 4 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. கடந்த 24-ந்தேதி போர் நிறுத்தம் தொடங்கிய நிலையில் இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
அதே போல் இஸ்ரேல் சிறைகளில் இருந்து பாலஸ்தீனர்களை இஸ்ரேல் அரசு விடுவித்தது. இதற்கிடையே போர் நிறுத்தம் மேலும் 2 நாட்கள் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 5-வது நாளாக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது.
4 நாள் போர் நிறுத்தம் முடிவில் 50 இஸ்ரேலியர்கள், 19 வெளிநாட்டினர் என 69 பேர் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் சிறைகளில் இருந்து 150 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையே போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதால் நேற்று 5-வது நாளாக மேலும் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். 10 இஸ்ரேலியர்கள், 2 வெளிநாட்டினர் விடுவிக்கப்பட்டனர். அவர்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் ஒப்படைத்தனர்.
இதேபோல் நேற்று இஸ்ரேல் சிறைகளில் இருந்து 30 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.



