ஷிபா மருத்துவமனையில் கிடைத்த முக்கிய ஆவணம்

இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியையும் சூறையாடியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர்.
இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்நிலையில், காசாவின் அல்-ஷிபா மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட லேப்டாப்பில், பணய கைதிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் காணப்பட்டன என இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில், சில கட்டிடங்களில் சோதனை செய்ததில், ஆயுதங்கள், அக்டோபர் 7-ந்தேதி சம்பவத்துடன் தொடர்புடைய தகவல், ராணுவ தொழில் நுட்பங்கள் மற்றும் ராணுவ சாதனம், தலைமையகங்கள் உள்ளிட்டவை பற்றிய உளவு தகவல்கள் என ஹமாஸ் அமைப்புக்கு உரிய அனைத்து வகையான தகவல்களும் இருந்தன என தெரிவித்து உள்ளது.



