நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து இன்றும் விசாரணை!
நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இன்று (09.11) இறுதித் தீர்மானம் வழங்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் டயனகமகே, சமகி ஜன பலவேகய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்றை மஹிந்த யாப்பா அபேவர்தன நியமித்தார்.
குறித்த குழு கடந்த திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் கூடியதுடன், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, குறித்த குழு இன்று (08.11) மூன்றாவது நாளாகவும் கூடும் எனவும், அங்கு சம்பவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் வழங்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.