ஹமாஸ் குழு உட்பட மேலும் இரண்டு குழுக்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

ஹமாஸ் குழு உட்பட மேலும் இரண்டு குழுக்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தடை ஹமாஸ் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது சுற்று தடையாக உள்ளது.
இந்த பொருளாதார தடை ஹமாஸ் முதலீடு செய்துள்ள சொத்துகளையும், ஹமாஸுடன் இணைந்த நிறுவனங்களையும் முடக்கும் விதிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற போராளிக் குழுக்களை ஈரான் ஆதரிக்கிறது என்பது அமெரிக்காவின் நீண்ட காலக் குற்றச்சாட்டு. இந்தக் குழுக்களுக்கு ஈரான் நிதியுதவி அளிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் ஹமாஸ் மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் வான்வழிப் பிரிவின் தலைவரான இஸ்ஸாம் அபு ருக்பே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான ஷின் பெட் தெரிவித்திருக்கிறது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்னும் சுவாலை விட்டு எரிய தொடங்கியிருக்கிறது. ஹாமஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் தனது அடுத்தடுத்த நகர்வுகளை கவனமாக எடுத்து வைக்கிறது. இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பு தங்களுடைய முக்கியப் படைத் தளபதிகளை அடுத்தடுத்து இழந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



