ஈரான் ஆதரவுக் கிளர்ச்சிக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்த தயாராகும் அமெரிக்கா!

ஈரான் ஆதரவுக் கிளர்ச்சிக் குழுக்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.
ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கூறியுள்ளார்..
சிரியாவின் கிழக்குப் பகுதியில் அமெரிக்கப் போர் விமானங்கள் இந்த வாரம் தாக்குதல் நடத்தின. அமெரிக்க மக்களவை நாயகர் மைக் ஜான்சனுக்கு (Mike Johnson) எழுதியுள்ள கடிதத்தில் பைடன் அது குறித்துக் கூறியுள்ளார்.
முன்னதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுடன் (Benjamin Netanyahu) ஜான்சன் தொலைபேசியில் உரையாடினார்.
அமெரிக்க மக்களவை இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவு வழங்குவதை மறுவுறுதிப்படுத்தியதாக ஜான்சன் X சமூக ஊடகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மாதம் 7 ஆம் திகதி (07.10.2023) ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இஸ்ரேலில் திடீர்த் தாக்குதலை நடத்தியது. தாக்குதலில் 1,400 பேர் மாண்டனர். ஹமாஸ் குழு 229 பேரைக் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது.
அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் சுமார் 7000 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சண்டையில் ஈரான், ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவுக்கு ஆதரவளித்து வருகிறது.



