அம்பிட்டிய தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் : வீணான சந்தேகங்கள் வேண்டாம் - டிரான் அலஸ்!

அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
மங்களராமய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதற்கு பலர் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.
அத்துடன் பல்வேறு தரப்பினர் அவருக்கு எதிராக முறைப்பாடுகளை செய்ததுடன், நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நாட்டில் சட்டம், ஒழுங்கை அமுலாக்குவதற்கும், அமைதியைப் பேணிக்காப்பதற்காகவும் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
ஆகவே, முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அந்த வகையில் வீணான சந்தேகங்களை வெளியிட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.



