எக்ஸ்பிரஸ் பேர்ல் சேதவிபரம் குறித்த விரிவான அறிக்கையை கோரும் சஜித்!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம் குறித்த விரிவான அறிக்கையை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம் குறித்து துல்லியமாகக் கணக்கிடப்படாததால், பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரை மட்டுமே சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறு இருப்பினும் கடல் ஆமைகளின் உடல்கள் கிழக்கு கடற்கரை வரை குவிந்திருந்ததாகக் கூறப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது பல்லுயிர் வகைமை மற்றும் மீனவ சமூகத்தின் மீது ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்கம் அபரிமிதமானது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனால் நட்டஈடு பெறும் மீனவர்களின் எண்ணிக்கையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது இவ்வரம்பை மீறி பாதிப்பு ஏற்பட்டதா இல்லையா என்பதைக் கணக்கிடுவதற்கான தரவுகளும் மீன்பிடி அமைச்சிடம் இருந்து இதுவரை கிடைக்கப்படவில்லை என விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
எனவே தற்போதேனும் நிபுணர் குழுவிடம் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து இழப்பீடு தொடர்பாக விரிவான அறிக்கையை தயாரிக்குமாறும் கேட்டுக் கொள்வதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



