கதவடைப்புப் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்கவுள்ள வடமாகாண தனியார் வர்த்தக சங்கம்!

தமிழ்த்தேசிய கட்சிகளால் எதிர்வரும் 20.10.2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது முடக்கம் மற்றும் முழு கதவடைப்புப் போராட்டத்திற்கு வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இலங்கையின் நீதித்துறையிலிருந்து தமிழருக்கு நீதிகிடைக்காது என்பதை வலியுறுத்தியும், முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரீ. சரவணராஜா போன்ற நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழலைக் கண்டித்தும், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களில் தமிழ் மக்களின் இடங்களை அபகரித்து தொடர்ச்சியாக புத்த கோயில்கள் கட்டுவதை கண்டித்தும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் தமிழ் மக்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை பலவந்தமாக பறித்து சிங்கள மக்களை குடியேற்றுவதை எதிர்த்தும் குறித்த கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆகவே இந்த பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு வடமாகாண தனியார் வர்த்தகர் சங்கம் தமது முழுமையான ஆதரவை வழங்குவதோடு, வடக்கு கிழக்கில் சகல வர்த்தக நிலையங்களையும் மூடி போக்குவரத்தை நிறுத்தி, போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு தொழிற்சங்கங்களையும், பொது மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.



