மோதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் செல்லவுள்ள ஜோ பைடன்

பரபரப்பிற்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) நாளை இஸ்ரேல் செல்லவிருக்கிறார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுடன் (Benjamin Netanyahu) அவர் பேச்சு நடத்துவார் என கூறப்படுகின்றது.
காஸா தாக்குதலில் பொதுமக்கள் பலியாவதைத் தடுக்கும் வகையில் இஸ்ரேல் எப்படிச் செயல்படப்போகிறது என்பது குறித்து பைடன் பேசவிருக்கிறார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) அதனை இன்று தெரிவித்தார்.
இஸ்ரேல், காஸாவில் உள்ள ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதலை நடத்தத் தயாராகும் வேளையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவை உறுதிசெய்யும் என்று திரு பிளிங்கன் கூறியுள்ளார்.
இம்மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்தியது. அதில் 1,300 பேர் பலியாயினர்.
அதனையடுத்து இஸ்ரேல் ஹமாஸ் குழுவினர் இருக்கும் காஸா பகுதியைத் தாக்கத் தொடங்கியது. இதுவரை காஸாவில் 2,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பூசல் தற்போது 11ஆவது நாளாக நீடிக்கிறது



